குமாருக்கு, அந்த தெரு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்த தெருவை அடைந்தால் அதிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தெருவை ஒட்டியபடி படிக்கட்டுகள் கொண்ட அந்த வீட்டை கண்டுபிடிப்பது சுலபம்.
போனமுறை வந்தபோது ஒரு ரிக்க்ஷாகாரர் தான் அந்த தெருவை காட்டினார்.
"ருக்மணி தெருவா! நேரா போய் வலது பக்கமா திரும்புனா ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவுக்கு பக்கத்து தெரு தான் இந்த ருக்மணி தெரு. அங்க யார பாக்கனும்!?.. " கையில் ஒரு வரைபடைத்தை வரைந்து முடித்து கையை கீழே போடமலயே பார்த்துக்கொண்டிருந்தார்.
யாருக்கு தெரியும் இப்போ கூட அதே ரிக்க்ஷாகாரர் அங்கயே இருக்கலாம். ஒரு புன்முறுவலோடு பேருந்துக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறுவனாக இருந்தபோது தான் எந்த கவலையும் இல்லை. விளையாட்டு , தூக்கம் னு நிம்மதியா இருந்த நாட்கள்.
விடுமுறை நாட்களில் கூட சொந்த பந்தங்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. பெரியவர்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, சிறுவர்கள் நாங்க எல்லாம் எங்க வீட்டு மாடிக்கு விளையாட ஓடுவோம்.
ஒரு மல்லிக்கொடி படிக்கட்டுகளில் படர்ந்து மாடி வரை வந்து வேடிக்கை பார்க்கும். அதன் வாசனை இப்போது கூட நினைவுகளில் கலந்து வீசுகிறது.
பேருந்தை விட்டு இறங்கி நடந்தான். ரிக்க்ஷா காரர் இன்னமும் கை நீட்டியபடி நிற்பது போலவே இருந்தது. ஒரு ஆட்டோகாரர்"சார் எங்க போகனும் வாங்க" என்று கையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
போனமுறை நான்காம் வகுப்பு நண்பனுடன் வந்து வழி தெரியாமல் கேட்டு கேட்டு அந்த வீட்டை கண்டுபிடித்தேன். இம்முறை கொஞ்சம் நினைவிருக்கு. ஆனால்,
மண் சாலைகளெல்லாம் சிமெண்ட் சாலையாக உறுமாறி இருந்தது.
சாலையின் ஓரத்தில் ஒரு அம்மா கூடையில் பூ விற்றுக்கொண்டிருந்தாள்."தம்பி கல்யாணம்ஆகிடுச்சா பூ வாங்கிட்டு போங்க"என்றதும், ஒரு முழம் மல்லி பூவை வாங்கி பையில் போட்டுக்கொண்டேன்.
அந்த வாசனை மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு நினைவில் நிறுத்தி சந்தோசபடுத்திக்கொண்டிருந்தது.
ஒரு வீட்டின் காமௌண்ட் சுவரில் சிவப்பு வண்ண பூக்களை இறைத்தது போல கொடிகள் படிந்திருந்தது. அந்த வீட்டின் கேட்டை கடக்கும்போது ஒரு நாய் என்னை பார்த்து குறைத்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நானும் லட்சுமியும் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட , இப்படி ஒரு கருப்பு நாய் எங்களை துரத்தியது நினைத்து இன்றைக்கு தான் சிரிப்பு வருகிறது.
படிக்கட்டுகளில் படர்ந்த மல்லிப்பூக்களை பறித்து லட்சுமியிடம் கொடுத்தால் அவள் அழகாக சிரிப்பாள். எத்தனையோ சந்தோசமான நிகழ்வெல்லாம் சிறுவயதிலே நடந்து முடிந்துவிட்டது. தற்போது இருக்கும் வாடகை வீடு பெரிய வீடு தான். இருந்தும் எங்களுடைய அந்த சிறுவயது வீடு கொடுத்த சந்தோஷம் எங்குமே கிடைக்கல.
அன்று கூட அப்படி தான் படிக்கட்டுகளில் படர்ந்த மல்லிப்பூ வாசனை கமகமக்க, வீட்டை சுற்றி சீரியல் பல்புகளெல்லாம் மின்னிக்கொண்டிருந்தது. எல்லோரும் ரொம்ப சந்தோசமாக இருந்தோம்.
என் அக்காவை நடுவில் அமர்த்தி, கண்ணத்தில் சந்தனம், மஞ்சல் எல்லாம் பூசி ஊறே பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். பக்கத்து தெருவில் இருக்கும் லட்சுமி கூட வந்திருந்தாள்.
லட்சுமி இப்ப எப்படி இருப்பாள்! சிறுவயதில் என்னை சுற்றி சுற்றி வருவாள். வீட்டில் ஆள் இல்லாதபோது கூட குமார் எங்க அத்த என்று அம்மாவிடம் கேட்டுட்டு போவாள்.
ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாத சமையம். என்னை தேடி வந்தபோதுதான் என் அப்பாவின் நிலமையை கண்டு ஊரில் எல்லாரிடமும் சொன்னவளே அவள் தான்.
மார்பில் கை வைத்தபடி அப்பா துடித்துக்கொண்டிருந்தார். சுற்றிலும் நின்ற ஆட்கள் பதற்றத்துடன் இருந்தது இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.
ஏதேதோ ஆஸ்பிட்டலுக்கொல்லாம் சென்று பார்த்தோம். பணமெல்லாம் தீர்ந்து கடைசியில் வீட்டையும் விற்று அப்பாவை வாங்கிக்கொண்டு போனது மரணம்.
வீட்டை விற்றது தெரிந்து கடைசியாக அவர் குழந்தை போல் கதறி அழுதது, நினைவுகளின் கருப்பு பக்கம்.
சொந்தங்களெல்லாம் விலகி, சந்தோசமெல்லாம் தொலைத்த நாட்களை நினைத்தால் இப்பொதும் கூட தொண்டை அடைக்கிறது.
பிள்ளையார் கோவில் ஒட்டி உள்ள கடையில் சோடாவை வாங்கி குடித்துவிட்டு நகர்ந்தேன்.
காய்ந்த பூவரச சருகுகள் ரோட்டில் உருண்ட படி இருந்தது.
பிள்ளையார் கோவிலை ஒட்டிய தெருவில் நுழையும் முன் , 'ருக்மணி' தெருவில் ஒரு முறை சென்று பார்க்கலாம் என மனது கெஞ்சியது.
ருக்மணி தெருவில் நுழைந்து நான்கு வீடுகள் தள்ளி ஐந்தாவது வீடு வந்தது..
வீட்டூற்க்கு நேராக இருக்கும் மற்றொரு வீட்டின் காம்பௌன்ட் சுவரில் சாய்ந்துகொண்டேன்.
சிறுவயதில் பார்த்த அதே வீடு.
மல்லிக்கொடி இருந்த இடத்தில் ஏதேதோ பூண்டு செடிகளெல்லாம் முளைத்திருந்தது..
படிக்கட்டுகளெல்லாம் விரிசலடைந்து. புதர்களுக்கு மத்தியில் நின்று என்னை பார்க்கிறது வீடு.
எவ்வளவு நேரம் அப்படியே பார்த்திருப்பேன் தெரியாது. பழைய நினைவுகளை மீண்டும் ஒருமுறை கண்முன்னே கொண்டு வந்தது எங்கவீடு.
அதற்க்கு முன்புறம் 'இது திரு. கருணாகரன் சொத்து' என்ற ஒரு பலகை ஊசலாடிக்கொண்டிருந்தது.
கண்களை துடைத்துக்கொண்டு. பையிலிருந்த பத்திரிக்கையை எடுத்தேன்.
இன்று லட்சுமிக்கு திருமணம் பத்திரிக்கையில் அவள் பெயரை தடவிப் பார்த்து அம்மா கொடுத்து விட்ட 500 ரூபாய் மொழி பணத்தையும் சரிபார்த்து விட்டு.
நகர்ந்தேன்..
தெரு முனையில் நின்று கடைசியாக பார்ப்பது போல பார்த்தேன். பிடித்த விசயங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகும்போது இப்படி தெருமுனையில் நின்று ஏக்கமாக பார்க்கும்போதெல்லாம் மனது கனக்கிறது.
~சதிஷ்.

எவ்வளவு கற்பனை நிறைந்த வரிகள் அழகான கதை
பதிலளிநீக்கு